Saturday, September 20, 2008

உலகம் ஒரு நாடக மேடை

உலகம் ஒரு நாடக மேடை

உணர்ந்தவர் நிச்சயம் ஒரு மேதை

உள்ளளவும் ஐயம் இல்லை

உண்மையே அன்றி வேறு இலலை

தன்னில் தன்னை உணர்ந்த முதல்

தன்னை முற்றும் உணரும் வரை

ஒவ்வொருவனும் நடிக்கிறான்

உண்மை உருவை மறைக்கிறான்

எதை எதுவிடமிருந்து காப்பாற்ற

உலகிற்கு எதை பறைசாற்ற

மனிதன் நடிக்க முயல்கிறான்

முடிவில் மீண்டும் மீண்டும் உழல்கிறான்

என்ன இழக்கக்கூடாதென்றும்

எதைப் பெறுவதற்காக வென்றும்

மனிதன் சாயம் பூச நினைக்கிறான்

முடிவில் சாயம் பூசப்பட்டு தவிக்கிறான்

மண்ணில் விழுந்தவுடன் அழுகை

பரிதாபம் பெறுவதற்கான செய்கை?

உண்ணுவதும் உறங்குவதும் சில காலம்

இன்னொரு முறை ஏமாறும் ஞாலம்?

முதலில் பெற்றோரிடம் பயிற்சி

பிறகு மற்றோரிடம் முயற்சி

சந்தர்ப்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை

வெட்கம் கூச்சம் கொஞ்சமும் இல்லை

கண்டதை காணாதது போலும்

கேளாததை கேட்டது போலும்

உணராததை உணர்ந்தது போன்று

அறியாததை அறிந்தது போன்று

நடிப்பதில் தன்னையே மறக்கிறான்

உண்மை வெளிவராதென்று மகிழ்கிறான்

உண்மையில் ஒருவன் கணக்கு எடுக்கிறான்

கணக்கிற்கு ஏற்ற படி மறுபிறவி கொடுக்கிறான்!

----------------------------------------------

நகுலன்

No comments: